May 24, 2012

களவியல் -1120


·  அதிகாரம்   : 112-நலம் புனைந்து உரைத்தல்
·  இயல்      : களவியல்
·  பால்          : காமத்துப்பால்
·  குறள்                : 1120

அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்

சொல் விளக்கம்:
அனிச்சம் - ஒரு வகை மலர்
தூவி இறகு
பொருள்:
அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.
விளக்கம்:
தனது காதலியின் இனமான பெண்ணினத்தையே பெருமைப்படுத்த நினைக்கிறார் வள்ளுவர்.
பொதுவாக பெண்மை என்றாலே மென்மை என்று அனைவரும் அறிவோம். அதனால் தான் 'அம்மா' என்ற வார்த்தை
மெல்லின 'ம்,மா' எழுத்துகளால் வழங்கப்படுகிறது.

வள்ளுவர் இந்த மெல்லினப் பண்பை, பொதுவாக சொல்லிவைக்காமல் எடுத்துக்காட்டு கொண்டு விளக்குகிறார்.
தன் காதலியின் பாதங்களைப்பார்க்கிறார்.மெல்லிய பாதங்களைப்பார்த்து வியக்கிறார்.அவர் மனதில் கற்பனை உருவெடுக்கிறது.
உவமைக்கு உதாரணம் தேடுகிறார்.மலரின் இதழும்,பறவை இறகும் நினவுக்கு வருகிறது.

இரண்டு உதாரணங்களுக்கும், உயர்வான பெயர்களை ஆராய்ந்து பிறகு ஒரு முடிவுக்கு வருகிறார்.அனிச்சை அல்லது அனிச்சம்மிகவும் மென்மையான இதழ்களினை உடைய ஒரு மலர் இனம்.முகர்ந்து பார்த்தவுடனேயே வாடிவிடக்கூடிய இயல்புடையது.
அது போல, பறவை இறகுகளில் அன்னத்தின் இறகு மிகவும் மென்மையான ஒன்று.
உதாரணம் கிடைத்து விட்டது. அவற்றை ஓரம்கட்டி தன் காதலியின் பாதங்களை உயர்வுபடுத்த திட்டமிடுகிறார்.அதனை இருவரிகளில் அழகாக தொடுக்கிறார்.

"என் அன்பே! உன் பாதங்களை பிற கவிஞர்கள் சொல்வது போல் மலரினும் மெல்லியது என சொல்வதை விட,உயர்வாக கூற விழைகிறேன்.
மலரிலே மிக மென்மையானதுமான, முகர்ந்தால் கூட வாடிவிடுவதுமான அனிச்சமும்,மெல்லிய அன்னத்தின் இறகுகளும் கூட உன் பாதத்திற்கு நெருஞ்சி முள் போல வலியைத் தரக்கூடியது. மிதித்த சுவடுகள் அந்த மலர் போல், இறகைப்போல் உன் பாதத்தில் இளஞ்சிவப்பாய் பதிந்துள்ளதைப் பார்த்து வியக்கிறேன்!" என் பொருள்பட முடிக்கிறார்.