Showing posts with label காமத்துப்பால். Show all posts
Showing posts with label காமத்துப்பால். Show all posts

Mar 4, 2014

கற்பியல் - 1151



·  அதிகாரம்                      : 116 -பிரிவு ஆற்றாமை
·  இயல்                              : கற்பியல்
·  பால்                                : காமத்துப்பால்
·  குறள்                               : 1151

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை
.
 
சொல் விளக்கம்:
வல்வரவு  - விடைபெறுதல்
மற்று – இல்லையெனில்

பொருள்:
என்னைப் பிரிவதில்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல்.

விளக்கம்:
பிரிவு என்பது அனைவருக்கும் ஒன்றாக இருப்பதில்லை.பெற்றோர் பிள்ளைகளைப் பிரிகிறார்கள்.நட்பில் கூட பிரிவு வருகிறது.இவை இரண்டைக்காட்டிலும் மிகுந்த துயர் சேர்க்கும் பிரிவு ஒன்று உண்டு.அது காதலர்கள் பிரிவு.சங்க காலம் முதலே பொருள் தேடி ஆடவர்கள் சொந்த ஊர் விட்டு தூர நகரங்கள் செல்வதுண்டு.

அப்படியாக, நம் தலைவன் பணி நிமித்தமாக வெளியூர் செல்ல ஆயத்தமாகிறான்.எவ்வளவு காலம் கழித்து திரும்புவான் என்ற தகவலும் இல்லை.இந்தச் செய்தியை தலைவியிடம் சொல்ல அவன் விரைகிறான்.ஆனால் தோழி வழியாக,இந்தச் செய்தியை முன்பே அறிந்திருந்த தலைவி தலைவனை வாய்பேச விடவில்லை.
"என்னைப் பிரியப் போகிறேன் என்ற வார்த்தையைச் சொல்லத்தானா இங்கு வந்தீர்? உங்களைப் பிரிந்தால் எங்கணம் நான் வாழ்வேன்?இப்போது கூறுங்கள்,என்னைப் பிரிந்து சொல்ல மாட்டேன் என்று! அது ஒன்றே எனக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.இல்லை, போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீங்கள் திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் இப்போது விடைபெற்றுக் கொள்ளுங்கள்!” என்று அழுதுகொண்டே உரைக்கிறாள்.தலைவன் உறைந்துபோய் நிற்கிறான்.

பொருள் தேடி வந்தால் தான் பிழைக்க முடியும் என்ற ஆறுதல்வார்த்தைகளைக் கேட்கவும் தலைவி தயாராக இல்லை.அவன் பெற்றோர்,உறவினர் மற்றும் நண்பர்களால் கூட அவனது பிரிவை நினையாமல் வாழ முடியும்.தலைவியால் அது இயலாது என்றும் அப்படி பிரிந்து சென்றால், அத்துயரால் அவள் இறந்துவிடக்கூடும் என்றும் இரண்டு வரிகளில் வள்ளுவர் அழகாக சொல்லியிருக்கிறார்.

Dec 17, 2012

களவியல் -1116



·  அதிகாரம்                      : 112-நலம் புனைந்து உரைத்தல்
·  இயல்                              : களவியல்
·  பால்                                : காமத்துப்பால்
·  குறள்                               : 1116

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.
 
சொல் விளக்கம்:
மதி - திங்கள்/நிலவு
அறியா பதியின் – அறியாததாகையால்
பொருள்:
மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் மயங்கிக் தவிக்கின்றன.
விளக்கம்:
நலம் புனைந்து உரைத்தல் என்ற இந்த அதிகாரம் முழுவதுமே, தன் தலைவியை உச்சகட்டமாக வர்ணிக்கிறார் புலவர்.அவளது இடையின் எளிமை ,அவள் பாதத்தின் மென்மை என ஒவ்வொன்றாய் விவரிக்கிறார்.

இந்தக்குறளில், தலைவியின் முகத்தை, நிலவுடன் ஒப்பிடுகிறார்.பிற்காலக் கவிஞர்களில் பலர்  இதே உவமையை எடுத்தாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.வள்ளுவரே அவர்கட்கு முன்னோடி.

சிறுவயதில் ஒருவர் நம்முடன் பள்ளியில் படித்திருக்கிறார்.ஏதோ காரணங்களால் அவர் வேறு இடம் சென்றுவிட்டார் என வைத்துக்கொள்வோம்.பல ஆண்டுகள் கழித்து அவர் முகத்தை திரும்பவும் நாம் பார்க்க நேரிடும்போது,சட்டென நினைவுக்கு வந்துவிடும்.நமக்கே இப்படி என்றால்,விண்மீண்களையும்,நிலவையும் நினைத்துப்பாருங்கள்.நிலவை, பல கோடி ஆண்டுகளாய் அருகில் நிறுத்தி பார்த்திருப்பவை விண்மீண்கள் மட்டுமே.

எக்காரணங்கொண்டும் மறதி என்பது, குழப்பம் என்பது அங்கே நிலைபெற வாய்ப்பே இல்லை.ஆனால், விண்மீண்கள் அன்றெனப் பார்த்து, தலைவியின் ஒளி பொருந்திய முகத்தைக் கண்டுவிட்டன.நின்ற நிலையிலேயே குழம்பிக் கிடந்தன.நிலவு எப்படி பூமிக்கு இறங்கிப் போனது என்று விவாதித்துக்கொண்டன.உண்மையான திங்கள் அருகில் இருந்தபோதும்,தலைவியின் முகத்தின் பேரொளியைக்கண்டு கலங்கித் தவித்தன விண்மீன்கள்.

கற்பனையின் உச்சமல்லவா இது.அருகிலே இருக்கும் தன் காதலியின் முக ஒளியில் மயங்கிக்கிடக்கும் காதலன்,தன் நிலையில் விண்மீண்களை நிறுத்திப் பார்ப்பதுபோல் அமைந்த குறள் இது.அருமையான சிந்தனை.

May 24, 2012

களவியல் -1120


·  அதிகாரம்   : 112-நலம் புனைந்து உரைத்தல்
·  இயல்      : களவியல்
·  பால்          : காமத்துப்பால்
·  குறள்                : 1120

அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்

சொல் விளக்கம்:
அனிச்சம் - ஒரு வகை மலர்
தூவி இறகு
பொருள்:
அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.
விளக்கம்:
தனது காதலியின் இனமான பெண்ணினத்தையே பெருமைப்படுத்த நினைக்கிறார் வள்ளுவர்.
பொதுவாக பெண்மை என்றாலே மென்மை என்று அனைவரும் அறிவோம். அதனால் தான் 'அம்மா' என்ற வார்த்தை
மெல்லின 'ம்,மா' எழுத்துகளால் வழங்கப்படுகிறது.

வள்ளுவர் இந்த மெல்லினப் பண்பை, பொதுவாக சொல்லிவைக்காமல் எடுத்துக்காட்டு கொண்டு விளக்குகிறார்.
தன் காதலியின் பாதங்களைப்பார்க்கிறார்.மெல்லிய பாதங்களைப்பார்த்து வியக்கிறார்.அவர் மனதில் கற்பனை உருவெடுக்கிறது.
உவமைக்கு உதாரணம் தேடுகிறார்.மலரின் இதழும்,பறவை இறகும் நினவுக்கு வருகிறது.

இரண்டு உதாரணங்களுக்கும், உயர்வான பெயர்களை ஆராய்ந்து பிறகு ஒரு முடிவுக்கு வருகிறார்.அனிச்சை அல்லது அனிச்சம்மிகவும் மென்மையான இதழ்களினை உடைய ஒரு மலர் இனம்.முகர்ந்து பார்த்தவுடனேயே வாடிவிடக்கூடிய இயல்புடையது.
அது போல, பறவை இறகுகளில் அன்னத்தின் இறகு மிகவும் மென்மையான ஒன்று.
உதாரணம் கிடைத்து விட்டது. அவற்றை ஓரம்கட்டி தன் காதலியின் பாதங்களை உயர்வுபடுத்த திட்டமிடுகிறார்.அதனை இருவரிகளில் அழகாக தொடுக்கிறார்.

"என் அன்பே! உன் பாதங்களை பிற கவிஞர்கள் சொல்வது போல் மலரினும் மெல்லியது என சொல்வதை விட,உயர்வாக கூற விழைகிறேன்.
மலரிலே மிக மென்மையானதுமான, முகர்ந்தால் கூட வாடிவிடுவதுமான அனிச்சமும்,மெல்லிய அன்னத்தின் இறகுகளும் கூட உன் பாதத்திற்கு நெருஞ்சி முள் போல வலியைத் தரக்கூடியது. மிதித்த சுவடுகள் அந்த மலர் போல், இறகைப்போல் உன் பாதத்தில் இளஞ்சிவப்பாய் பதிந்துள்ளதைப் பார்த்து வியக்கிறேன்!" என் பொருள்பட முடிக்கிறார்.