Mar 6, 2013

அரசியல் -0423


அதிகாரம்          : அறிவுடைமை
இயல்             : அரசியல்
  பால்              : பொருட்பால்
குறள்              : 423

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

சொல் விளக்கம்:
பொருள் - சொல்/அறிவுரை/பொருள்பட உரைப்பவை.
 
பொருள்:
எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பாமல்,அதேசமயம் ஒதுக்காமல்  உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்

விளக்கம்:
சில நேரங்களில் எனக்குள் ஒரு சந்தேகம் வருவதுண்டு.ஒரு சொல்லின் மதிப்பு என்பது எங்கிருந்து வருகிறது.சொல்பவர்களிடமிருந்தா அல்லது அதன் பொருளில் இருந்தா என்று.இந்தக் குறள் அதற்கான விடையை எனக்குக் கொடுத்தது.எவர் சொன்னால் என்ன? அதில் உண்மைப் பொருள் இருக்கிறது என நீ உணர்ந்தால்,அதை ஆராய்ந்து ஏற்றுக்கொள் என்கிறார் வள்ளுவர்.

பின்வரும் கதை இதற்கு சிறந்த உதாரணம்.

ஒரு குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன்.

குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.
‘‘தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?’’ என்று கேட்டான்.
‘‘வருமே...’’ என்றான் சிறுவன்.

‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’

‘‘மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்’’ என்றான்.

சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு குதிரை வண்டிக்காரனுக்குக் கோபம்.‘‘என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?’’ என்று கேட்டான்.

‘‘போய்த்தான் பாருங்களேன்’’ என்று சிறுவன் சொன்னதும், அவன் வண்டியை வேகமாக விரட்டி சென்றான்.

சிறிது தூரம் போனதுமே சாலை முழுவதும் கற்கள் கொட்டி இருந்தது. வண்டி தடுமாறிக் கவிழ்ந்தது. தேங்காய்கள் சிதறின. வண்டியை நிமிர்த்திக் கீழே சிதறிய தேங்காய்களை பொறுக்கி எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.
வண்டிக்காரனுக்கு சிறுவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.


1 comment:

  1. அருமையான பதிவுகள் ...நல்ல முயற்சி

    ReplyDelete