Feb 15, 2013

அமைச்சியல் - 0667

·  அதிகாரம்                      : 67 - வினைத்திட்பம்
·  இயல்                              : அமைச்சியல்
·  பால்                                : பொருட்பால்
·  குறள்                             : 0667

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து
.

சொல் விளக்கம்:
உருவு – உருவம்
எள்ளாமை - ஏளனம் செய்யாமை/எள்ளி நகையாடாமல் இருத்தல்

பொருள்:
உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிப் போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர், அவர்களுடைய உருவின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது.

விளக்கம்:
ஒரு ஊரில் மிகப்பெரிய ஒரு தொழிற்சாலை இருந்தது.ஏராளமான மின்சாதனங்கள் அங்கே இயங்கிக்கொண்டு இருந்தன.ஒருநாள் திடீரென ஒரு இயந்திரம் வேலை செய்யவில்லை.அந்த இயந்திரத்தின் விலை 10 கோடி ரூபாய்.இதனைக் கேள்விப்பட்டு தலைமைப் பொறியாளர் அங்கு வந்தார்.எவ்வளவோ முயற்சித்தும் என்ன கோளாறு என்பதை ஊகிக்கமுடியவில்லை.
பிறகு அங்கு பல ஆண்டுகள் பணியாற்றி வரும் ஒரு ஊழியரை அழைத்து, இதற்கு முன் இந்த இயந்திரப் பழு பார்த்தவர் யார்? என்று கேட்டார்.அவர் பெயர் ராமசாமி.இதே ஊர்.அனுபவசாலி.அவர் நிச்சயம் இதை சரி செய்வார் என அந்த ஊழியர் பதிலளித்தார்.
அவர் சொன்ன முகவரிக்குச் சென்று, அங்கே இருந்த ராமசாமியைப் பார்த்தார் பொறியாளர்.ராமசாமி நல்ல கருப்பு,ஒல்லி தேகம்,அதிகம் படித்தவரில்லை என்பதைப் பார்த்தாலே ஊகிக்க நம்மால் முடியும்.அவரும் வர சம்மதித்தார்.ஒரு சுத்தியலை எடுத்து இயந்திரத்தின் மேல் இருந்த ஆணியை ஒரு தட்டு தட்டினார்.என்ன ஆச்சரியம் அந்த இயந்திரம் நன்றாக வேலை செய்தது.இதற்கு சன்மானமாக 5 லட்சம் ரூபாயை ராமசாமி கேட்க, இயந்திரத்தின் மதிப்பு கருதி அதைக் கொடுக்கவேண்டியதாயிற்று.அவரின் உருவத்தைக் கண்டு குறைத்து மதிப்பிட்டோம் என பொறியாளருக்கு பின் உறைத்தது.

உருவம் என்பது பாத்திரம் போல.பல வகைகளாய் பல அளவுகளில் அது இருக்கும்.ஆனால் திறமை,நல்ல குணம்,அறிவாற்றல் போன்றவை அதில் ஊற்றி வைக்கப் பட்டிருக்கும் அமிழ்தம் போன்றவை.ஆக, பாத்திரத்தை பெரிதாய் நினைத்து அமிழ்தினை இழந்து விடாதே என்ற அற்புதக் கருத்து இந்தக் குறளுக்குள் ஒளிந்துள்ளது.


No comments:

Post a Comment