Dec 17, 2012

களவியல் -1116



·  அதிகாரம்                      : 112-நலம் புனைந்து உரைத்தல்
·  இயல்                              : களவியல்
·  பால்                                : காமத்துப்பால்
·  குறள்                               : 1116

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.
 
சொல் விளக்கம்:
மதி - திங்கள்/நிலவு
அறியா பதியின் – அறியாததாகையால்
பொருள்:
மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் மயங்கிக் தவிக்கின்றன.
விளக்கம்:
நலம் புனைந்து உரைத்தல் என்ற இந்த அதிகாரம் முழுவதுமே, தன் தலைவியை உச்சகட்டமாக வர்ணிக்கிறார் புலவர்.அவளது இடையின் எளிமை ,அவள் பாதத்தின் மென்மை என ஒவ்வொன்றாய் விவரிக்கிறார்.

இந்தக்குறளில், தலைவியின் முகத்தை, நிலவுடன் ஒப்பிடுகிறார்.பிற்காலக் கவிஞர்களில் பலர்  இதே உவமையை எடுத்தாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.வள்ளுவரே அவர்கட்கு முன்னோடி.

சிறுவயதில் ஒருவர் நம்முடன் பள்ளியில் படித்திருக்கிறார்.ஏதோ காரணங்களால் அவர் வேறு இடம் சென்றுவிட்டார் என வைத்துக்கொள்வோம்.பல ஆண்டுகள் கழித்து அவர் முகத்தை திரும்பவும் நாம் பார்க்க நேரிடும்போது,சட்டென நினைவுக்கு வந்துவிடும்.நமக்கே இப்படி என்றால்,விண்மீண்களையும்,நிலவையும் நினைத்துப்பாருங்கள்.நிலவை, பல கோடி ஆண்டுகளாய் அருகில் நிறுத்தி பார்த்திருப்பவை விண்மீண்கள் மட்டுமே.

எக்காரணங்கொண்டும் மறதி என்பது, குழப்பம் என்பது அங்கே நிலைபெற வாய்ப்பே இல்லை.ஆனால், விண்மீண்கள் அன்றெனப் பார்த்து, தலைவியின் ஒளி பொருந்திய முகத்தைக் கண்டுவிட்டன.நின்ற நிலையிலேயே குழம்பிக் கிடந்தன.நிலவு எப்படி பூமிக்கு இறங்கிப் போனது என்று விவாதித்துக்கொண்டன.உண்மையான திங்கள் அருகில் இருந்தபோதும்,தலைவியின் முகத்தின் பேரொளியைக்கண்டு கலங்கித் தவித்தன விண்மீன்கள்.

கற்பனையின் உச்சமல்லவா இது.அருகிலே இருக்கும் தன் காதலியின் முக ஒளியில் மயங்கிக்கிடக்கும் காதலன்,தன் நிலையில் விண்மீண்களை நிறுத்திப் பார்ப்பதுபோல் அமைந்த குறள் இது.அருமையான சிந்தனை.